Thursday, October 9, 2014

இராவண காவியம்

கதைக்கு கால் இல்லை என்பார்கள். இது காப்பியம், புராணம் போன்ற பெரும் கதைகளுக்கும் பொருந்தும்.

அதே சமயம், ஒவ்வோரு கதையிலுல் ஒரு அரசியல் உள்ளிருக்கும். கதையைப் படிக்கும் போது அதன் பின்னனியில் இருக்கும் அரசியலையும் புரிந்து கொண்டு படிக்கவேண்டும். நாம் சார்ந்திருக்கும் ஒரு குழுவையோ அல்லது நாம் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தையோ இழிவு செய்யும் கதைகளை அடையாளம் கண்டு கொண்டு அந்த புரிதல் அவசியும்.

இந்திய துனைக்கண்டத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான புராணங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் அடிநாதமாக இருப்பது ஆரிய திராவிட இனப்போராட்டம்தான். நம்பவில்லை என்றால் இந்த கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு ஒவ்வோரு கதையையும் படித்தப் பாருங்கள்.

உதாரணத்திற்கு இராமாயணத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இதில் வடக்கே இருக்கும் ஆரியர்களுக்கும்(இராமன் குழு) தெற்கே இருக்கும் திராவிட குழுவிற்கும்(இராவணன் குழு) நடக்கும் போராட்டம்தான்.

நம் இனத்தை வெற்றி கொண்டு பெருமைப்படும் ஒரு காப்பியத்தை தமிழன் படிக்கும் போது கோபம் தானே வரவேண்டும். ஆனால் தன் இனத்தின் தோல்விக்காவியத்தை படித்து சுவைத்தக்கொண்டிருக்கிறான் தமிழன்!!!

கம்பனின் தமிழ் புலமைக்காக படிக்கிறேன் என்று சிலர் சொல்லலாம். படியுங்கள், தமிழ் சுவையை ரசியுங்கள் ஆனால் இந்த கதையின் பின்புலத்தில் இருக்கும் அரசியலையும் கவனித்தில் கொண்டு படியுங்கள்.

என்ன செய்வது, இராமாயானத்தை தமிழ் எழுத கம்பனை ஸ்பான்சர் செய்த சடையப்ப வள்ளலுக்கு இந்த அரசியல் புரியாமல் போய்விட்டது. அவருக்கு புரிந்திருந்தால், நம் இனத்தலைவனாகிய இராவணனை முன்னிலைப்படுத்தி கம்பனை காவியம் எழுத வைத்திருப்பார்.

அந்த குறை புலவர் குழந்தை அவர்களால் ஓரளவிற்கு தீர்க்கப்பட்டது. புலவர் குழந்தை இராவண காவியத்தை எழுதினார்.

இதோ அதன் விபரம் http://ta.wikipedia.org/s/ch3

இராவண காவியம் ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது. இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.


இராவண காவியம் தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் ஒரு பாடமாக வைத்திருக்கிறார்கள்; http://www.tamilvu.org/courses/degree/a011/a0114/html/A0114331.htm

தமிழர்களே இராமாயண கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க நினைப்போர், அதற்குப் பதிலாக இராவணகாவியத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முயற்ச்சிப்போம். இராவணகாவியத்தை கார்ட்டூன் வடிவில் கொண்டுவரவேண்டும்.
இராவண காவியத்தைப் பற்றி சொற்பொழிவாற்றி தமிழரிடையே பரப்ப தமிழறிஞர்கள் முன்வரவேண்டும்.


Monday, September 1, 2014

பகுத்தறிவு மாதம் பிறந்துவிட்டது!

நண்பர்களே பகுத்தறிவு மாதம் பிறந்துவிட்டது.

தமிழரிடைய பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பிய பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடுவோம். இந்த மாதம் முழுதும் பகுத்தறிவு கருத்துக்களை பற்றி சிந்திப்போம். இதில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் சமூக வலைத்தள பதிவுகளுக்கு #paguththarivumaadham என்ற hastagஐ பயன்படுத்தவும்.

பெரியார் சொல்லிவிட்டதால் அவர் சொல்வதனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை. அவர் கருத்துக்களை தராளமாக விமர்சனம் செய்யுங்கள். பெரியார் மட்டுமல்ல எந்த ஒரு அறிஞரும் சொன்ன கருத்துக்களை 100% ஏற்றுக்கொள்ள முடியாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற குறள் சொல்வதுபோல் நாம் நம் அறிவைப் பயன்படுத்தி உண்மையை பகுத்தறியவேண்டும்.

ஏன் உலகப்பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளிலேயே விமர்சிக்கப் படவேண்டி விசயங்கள் உள்ளன். திருக்குறளில் உள்ள பெண்ணடிமை கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்ளுங்கள் அவரிடம் விமர்ச்சிப்படவேண்டிய விசயங்கள் பல உள்ளன. அதற்காக காந்தியாரின் தியாகத்தையும், அகிம்சை கொள்கையையும் போற்றாமல் இருக்க முடியாது.

நமக்கு சொல்லப்படுகிற விசயங்களை நம் அறிவு கொண்டு ஆய்ந்து சரி என்று நமக்குப்படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பகுத்தறிவு. இது தான் மனித இனத்திற்குத் தற்போதைய தேவை. ஒரு நிமிடம் உலகில் இதுவரை நடந்த கொடுமைகள், மற்றும் தற்போது நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் நினைத்துப்பாருங்கள்.
அவை எல்லாம் ஒருவகையில் மனிதன் பகுத்தறிவை இழந்ததால் சில மூடக்கருத்துக்களை கேள்வி கேட்காமல் ஏற்றதால் நிகழ்ந்த கொடுமைகளாகத்தான் இருக்கும்.  மனிதகுலம் அறிவார்ந்த சமூதாயமாக மாறும் போது அமைதியான சமூகமாக மாறும். சிந்தியுங்கள் நண்பர்களே.

பகுத்தறிவு மாத சிந்தனையை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையோடு தொடங்குவோம். மரபு சார்ந்த விசயங்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு தமிழச்சி சொல்வதை கேளுங்கள்.

Thursday, August 21, 2014

செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடுவோம்.

தமிழ்நாட்டிலுள்ளவர்களைவிட வெளிநாட்டில் வாழும் தமிழர் அதிகம் மூடநம்பிக்கைகளுடன் இருப்பதாக எனக்குப் படுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா என்று புரியவில்லை.

ஜோசியர்களுக்கும், வாஸ்து பார்ப்போருக்கும், சாமியார்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடையே நல்ல வரவேற்பு(மற்றும் வசூல்) இருப்பதாக தெரிகிறது.

மீண்டும் சாதிப் பெயர்களை பெயருக்கு பின் போட்டுக்கொள்வதும் தமிழரிடையே அதிகரித்துள்ளது. இந்த சாதிப் பெயர் நீக்கும் சமூகப் புரட்சியை தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி சாதித்தோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை தமிழரிடையே குறிப்பாக, வெளிநாட்டு தமிழரிடையே தொடர்ந்து பரப்பவேண்டிய அவசியம் இருக்கிறது.
பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடினால் என்ன?

செப்டம்பர் மாதம் முழுதும் சமூக இணையத்தளங்கள் வழியாகவும், மற்ற நிகழ்ச்சிகள் வழியாகவும் தமிழர் அனைவரும் பகுத்தறிவு கருத்துக்களை பற்றி விவாதிக்கலாமா?

இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் பெரியாரின் கருத்துக்களை தினிப்பது அல்ல. பெரியாரே அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை.

பெரியார் என்றாலே இறை மறுப்பாளர் என்ற கருத்தை மட்டும் புரிந்துகொண்டுள்ளோர்தான் அதிகம். ஆனால் சாதி ஒழிப்பு, சமத்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு போன்ற பல முற்போக்கு விசயங்களுக்காக போராடியவர் பெரியார்.

 இங்கு வெளிநாடுகளில் பெரியார் பற்றியும் , திராவிட இயக்கத்தைப் பற்றியும் தெரியாமலே ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. பெரியார் என்ற ஒரு மாமனிதர் வாழ்ந்தார், அவரின் கொள்கைகள் இவை, அவர் உழைப்பால் தமிழ் சமூகத்து இந்த நன்மைகள்(அல்லது தீமை) வந்தது என்றாவது, வெளிநாடுகளில் வாழும் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இதை ஒரு அறிவுப்பூர்வமான விவாதமாக செய்வோம். ஆத்திகர்களும், மத ஆதரவாளர்களும் தங்கள் பிரச்சாரங்களை தங்கு தடையின்றி செய்யும்போது, நாம் கொஞ்சம் பகுத்தறிவு கொள்கைகளையும் சொல்லிவைப்போமே!

மக்கள் அவர்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் சரி என்று படுவதை ஏற்றுக்கொள்ளட்டும். இல்லை என்றால் விட்டுவிடட்டும்.


Monday, August 4, 2014

நாத்திக வாழ்கையில்...

கடவுளை மற, மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்து என்னுள் சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டது.  என்னிடம் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால்,  தெரியாது ஒருவேளை இருந்தாலும், கண்டிப்பாக தற்போது மதங்கள் போதிப்பது போல் இருக்க முடியாது என்பதுதான் என் பதில்.

எங்கள் வீட்டில் கடவுள்/மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை. நாங்கள் நாத்திகர்களாக வாழ்வதால் சில சுவராஸ்யமான நிகழ்ச்சிகள், எதிர்வினைகளை  சந்தித்திருக்கிறோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வேதாத்திரி மகரிசியின் தியான மையத்தில் கற்றுக் கொண்ட சில யோகா பயிற்சிகளை செய்து கொண்டுவருகிறோம். இதனால் எங்களையும் ஒருவகையான 'மதவாதி'களாக சிலர் கருதுவதுண்டு.

ஒருமுறை என் நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் தங்கியிருந்தனர். நண்பர் தினமும் தன் பையனுக்கு குளித்துவிட்டு (ஏதாவது ஒரு)சாமிப்படம் முன் வணங்கவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அன்று காலை எழுந்து குளித்துவிட்டு சாமிப்படம் எங்கே இருக்கிறது என்று கேட்டார். எங்க வீட்டுல எந்தப் சாமிப்படமும் இல்லை என்று சொன்னதும் அதிர்ந்தார்.

கடவுள் மற்றும் மத நம்பிக்கை இல்லாமல் வளர்ந்தால் குழந்தைகள் ஒழுக்கமற்றவர்களாகிவிடுவார் என்ற தவறான கருத்துத்துடன் பலர் இருக்கின்றனர். ஒழுக்கத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்மந்தமே இல்லை.

சொல்லப்போனால் உலகில் நடக்கும் பெரும்பாண்மையான அழிவுகளுக்கும் மனிதநேயமற்ற செயல்களுக்கும் காரணமாக இருப்பது மத நம்பிக்கையே. அதே சமயம் நாத்திகர்கள், மனிதநேயமிக்கவர்களாகவும் சமத்துவத்திற்கு குரல் கொடுப்பவர்களாக இருப்பதை பார்க்கலாம்.



எங்க மகனுக்கும் மதத்தைப் பற்றி சொல்லித்தராமல் வளர்க்கிறோம். ஆனால் மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும்  கண்டிப்புடன் சொல்லிக்கொடுக்கிறோம்.

தமிழரின் கலாச்சார கூறுகளில் சிலவற்றை நாம் குழந்தைகளுக்கு கோயில்களில் அறிமுகப்படுத்த முடியுமென்பதால். கோயிலுக்கு நாங்கள் சில சமயம் அழைத்துச்செல்வது உண்டு.  (கோயில்களும் ஆத்திகர்கள் கையில் என்ன பாடு படுகிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வதையும் பார்க்க: ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள் - http://www.jeyamohan.in/?p=47180)


சில மாதங்களுக்கு முன்னால் எங்க வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர், என்னுடைய 5 வயது மகன் ராமாயணம் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

என்ன நாத்திகர் வீட்டல ராமாயணம் ஓடுது என்று கிண்டலடித்துக்கொண்டே வந்தார். பையனிடமே கேளுங்க அந்த படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப்பற்றி என்றேன். அவர் ராமன் அனுமன் பற்றி கேட்க அதெல்லாம் "ரியல்" இல்லை, சும்மா படம் என்றான்.

ராமாயணம், நம்ம ஊரு பொன்னர் சங்கர் கதைகளேல்லாம் என் பையனுக்கு(http://www.ponnivala.com/ வழியாக) ஓரளவுக்கு தெரியும்.

ஆனா நம் புராணக்கதைகளை, புராணக்கதைகளாகவே அவனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்(அவை கடவுள்களின் திருவிளையாடல் என்று பொய்யாக அல்ல).

அதனால் ராமன், அனுமன், முருகன், சூரன், பொன்னர் சங்கரில் வரும் கதாப்பாத்திரங்கள் குன்றுடையான், தங்காள், திருமால் போன்றவர்கள் ஸ்பைடர் மேன், பேட்மேன், மிக்கிமவுஸ், போல் கற்பனை கதாப்பாத்திரங்கள்தான் என்ற தெளிவுடன் அவற்றை பார்க்கிறான். குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் சரியாக புரிந்துகொள்கிறார்கள்.

அதே போல் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் என் பையன் சாந்தாகிளாஸ் பற்றியும், அவர் பரிசுப்பொருட்களை தூங்கும் போது கொடுப்பார் என்று தன் நண்பன் சொன்னதாகவும் தெரிவித்தான். அது உண்மையா, எனக்கும் அவர் பரிசு கொடுப்பாரா? என்று கேட்டான்.

உண்மையை சொல்லலாமா இல்லை அவன் கற்பனையை கலைக்காமல் அப்படியே விட்டுவிடலாமா என்ற குழப்பம் சற்று எனக்கு இருந்தது. நாமும் கிருஸ்த்மஸ் அன்று பரிசுப் பொருட்களை வாங்கி அவன் அறையில் வைத்து அவனுடைய சாந்தா கிளாஸ் கற்பனையை அப்படியே விட்டுவிடலாமா என்றும் யோசித்தேன்.

பிறகு உண்மையை சொல்லிவிடுவதுதான் சரி என்று முடிவெடுத்தேன். கிறிஸ்துமஸ் தாத்தா என்பதெல்லாம் வெறும் கற்பனை என்றும் பரிசுப்பொருட்களை பெற்றோர்தான் வாங்கி தூங்கும் போது பிள்ளைகளுக்கு வைத்துவிடுவார்கள் என்று சொன்னேன். ஆனால் ஆச்சரியப்படும்படி அவன் அதை கேட்டு சிரித்தான். சாந்தாகிளாஸ் ரியல் இல்லையா என்று ஆச்சரியப்பட்டான்.

மதம் என்பதே 21ஆம் நூற்றாண்டுக்கு ஒவ்வாத, காலாவதியான மற்றும் மனித நேயத்திற்கு ஆபத்தான ஒரு சித்தாந்தம். இந்த காலாவதியான மத நம்பிக்கையை ஒன்றுமறியா குழந்தைகளின் மீது தினிப்பது சரியானது அல்ல என்று நான் கருதுகிறேன்.

அன்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், மத நம்பிக்கையுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் உண்மையையும் கற்பனையும் பிரித்துப்பார்ப்பதில் சிரமப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
காண்க: Study: Religious children are less able to distinguish fantasy from realityhttp://www.bbc.com/news/blogs-echochambers-28537149


இது போல் பல சுவராஸ்யமான விசயங்கள் உள்ளது... அதேபோல் கசப்பான நிகழ்ச்சிகளும் உள்ளது.

ஒருமுறை நாங்கள் ஒரு சொந்த இழப்பினால் துயரமான சூழலில் இருந்த சமயம், சிலர் நண்பர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்தால் இப்படித்தான் துன்பம்வரும் என்று வெளிப்படையாக சொல்லி வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.


சில விசயங்களை மற்றவர்களுக்கு சொல்லிப்புரியவைக்க முடியாது என்று விட்டுவிடுவேன்.

உலகில் மனித நேயம் வளர வேண்டுமானால் மதம் ஒழிக்கப்படவேண்டும் என்பது என் நம்பிக்கை.  இதே கருத்தை விரிவாக சொல்லும் Religulous என்ற டாக்குமென்டரி பார்க்கவேண்டிய ஒன்று..


https://www.youtube.com/watch?v=E2zhlDbMfDg

பதிவிலுள்ள படங்களின் மூலம்(Image sources):
http://www.atheistrepublic.com
http://www.unmaionline.com
http://www.wikipedia.org