Monday, August 4, 2014

நாத்திக வாழ்கையில்...

கடவுளை மற, மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்து என்னுள் சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டது.  என்னிடம் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால்,  தெரியாது ஒருவேளை இருந்தாலும், கண்டிப்பாக தற்போது மதங்கள் போதிப்பது போல் இருக்க முடியாது என்பதுதான் என் பதில்.

எங்கள் வீட்டில் கடவுள்/மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை. நாங்கள் நாத்திகர்களாக வாழ்வதால் சில சுவராஸ்யமான நிகழ்ச்சிகள், எதிர்வினைகளை  சந்தித்திருக்கிறோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வேதாத்திரி மகரிசியின் தியான மையத்தில் கற்றுக் கொண்ட சில யோகா பயிற்சிகளை செய்து கொண்டுவருகிறோம். இதனால் எங்களையும் ஒருவகையான 'மதவாதி'களாக சிலர் கருதுவதுண்டு.

ஒருமுறை என் நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் தங்கியிருந்தனர். நண்பர் தினமும் தன் பையனுக்கு குளித்துவிட்டு (ஏதாவது ஒரு)சாமிப்படம் முன் வணங்கவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அன்று காலை எழுந்து குளித்துவிட்டு சாமிப்படம் எங்கே இருக்கிறது என்று கேட்டார். எங்க வீட்டுல எந்தப் சாமிப்படமும் இல்லை என்று சொன்னதும் அதிர்ந்தார்.

கடவுள் மற்றும் மத நம்பிக்கை இல்லாமல் வளர்ந்தால் குழந்தைகள் ஒழுக்கமற்றவர்களாகிவிடுவார் என்ற தவறான கருத்துத்துடன் பலர் இருக்கின்றனர். ஒழுக்கத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்மந்தமே இல்லை.

சொல்லப்போனால் உலகில் நடக்கும் பெரும்பாண்மையான அழிவுகளுக்கும் மனிதநேயமற்ற செயல்களுக்கும் காரணமாக இருப்பது மத நம்பிக்கையே. அதே சமயம் நாத்திகர்கள், மனிதநேயமிக்கவர்களாகவும் சமத்துவத்திற்கு குரல் கொடுப்பவர்களாக இருப்பதை பார்க்கலாம்.



எங்க மகனுக்கும் மதத்தைப் பற்றி சொல்லித்தராமல் வளர்க்கிறோம். ஆனால் மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும்  கண்டிப்புடன் சொல்லிக்கொடுக்கிறோம்.

தமிழரின் கலாச்சார கூறுகளில் சிலவற்றை நாம் குழந்தைகளுக்கு கோயில்களில் அறிமுகப்படுத்த முடியுமென்பதால். கோயிலுக்கு நாங்கள் சில சமயம் அழைத்துச்செல்வது உண்டு.  (கோயில்களும் ஆத்திகர்கள் கையில் என்ன பாடு படுகிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வதையும் பார்க்க: ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள் - http://www.jeyamohan.in/?p=47180)


சில மாதங்களுக்கு முன்னால் எங்க வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர், என்னுடைய 5 வயது மகன் ராமாயணம் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

என்ன நாத்திகர் வீட்டல ராமாயணம் ஓடுது என்று கிண்டலடித்துக்கொண்டே வந்தார். பையனிடமே கேளுங்க அந்த படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப்பற்றி என்றேன். அவர் ராமன் அனுமன் பற்றி கேட்க அதெல்லாம் "ரியல்" இல்லை, சும்மா படம் என்றான்.

ராமாயணம், நம்ம ஊரு பொன்னர் சங்கர் கதைகளேல்லாம் என் பையனுக்கு(http://www.ponnivala.com/ வழியாக) ஓரளவுக்கு தெரியும்.

ஆனா நம் புராணக்கதைகளை, புராணக்கதைகளாகவே அவனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்(அவை கடவுள்களின் திருவிளையாடல் என்று பொய்யாக அல்ல).

அதனால் ராமன், அனுமன், முருகன், சூரன், பொன்னர் சங்கரில் வரும் கதாப்பாத்திரங்கள் குன்றுடையான், தங்காள், திருமால் போன்றவர்கள் ஸ்பைடர் மேன், பேட்மேன், மிக்கிமவுஸ், போல் கற்பனை கதாப்பாத்திரங்கள்தான் என்ற தெளிவுடன் அவற்றை பார்க்கிறான். குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் சரியாக புரிந்துகொள்கிறார்கள்.

அதே போல் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் என் பையன் சாந்தாகிளாஸ் பற்றியும், அவர் பரிசுப்பொருட்களை தூங்கும் போது கொடுப்பார் என்று தன் நண்பன் சொன்னதாகவும் தெரிவித்தான். அது உண்மையா, எனக்கும் அவர் பரிசு கொடுப்பாரா? என்று கேட்டான்.

உண்மையை சொல்லலாமா இல்லை அவன் கற்பனையை கலைக்காமல் அப்படியே விட்டுவிடலாமா என்ற குழப்பம் சற்று எனக்கு இருந்தது. நாமும் கிருஸ்த்மஸ் அன்று பரிசுப் பொருட்களை வாங்கி அவன் அறையில் வைத்து அவனுடைய சாந்தா கிளாஸ் கற்பனையை அப்படியே விட்டுவிடலாமா என்றும் யோசித்தேன்.

பிறகு உண்மையை சொல்லிவிடுவதுதான் சரி என்று முடிவெடுத்தேன். கிறிஸ்துமஸ் தாத்தா என்பதெல்லாம் வெறும் கற்பனை என்றும் பரிசுப்பொருட்களை பெற்றோர்தான் வாங்கி தூங்கும் போது பிள்ளைகளுக்கு வைத்துவிடுவார்கள் என்று சொன்னேன். ஆனால் ஆச்சரியப்படும்படி அவன் அதை கேட்டு சிரித்தான். சாந்தாகிளாஸ் ரியல் இல்லையா என்று ஆச்சரியப்பட்டான்.

மதம் என்பதே 21ஆம் நூற்றாண்டுக்கு ஒவ்வாத, காலாவதியான மற்றும் மனித நேயத்திற்கு ஆபத்தான ஒரு சித்தாந்தம். இந்த காலாவதியான மத நம்பிக்கையை ஒன்றுமறியா குழந்தைகளின் மீது தினிப்பது சரியானது அல்ல என்று நான் கருதுகிறேன்.

அன்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், மத நம்பிக்கையுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் உண்மையையும் கற்பனையும் பிரித்துப்பார்ப்பதில் சிரமப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
காண்க: Study: Religious children are less able to distinguish fantasy from realityhttp://www.bbc.com/news/blogs-echochambers-28537149


இது போல் பல சுவராஸ்யமான விசயங்கள் உள்ளது... அதேபோல் கசப்பான நிகழ்ச்சிகளும் உள்ளது.

ஒருமுறை நாங்கள் ஒரு சொந்த இழப்பினால் துயரமான சூழலில் இருந்த சமயம், சிலர் நண்பர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்தால் இப்படித்தான் துன்பம்வரும் என்று வெளிப்படையாக சொல்லி வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.


சில விசயங்களை மற்றவர்களுக்கு சொல்லிப்புரியவைக்க முடியாது என்று விட்டுவிடுவேன்.

உலகில் மனித நேயம் வளர வேண்டுமானால் மதம் ஒழிக்கப்படவேண்டும் என்பது என் நம்பிக்கை.  இதே கருத்தை விரிவாக சொல்லும் Religulous என்ற டாக்குமென்டரி பார்க்கவேண்டிய ஒன்று..


https://www.youtube.com/watch?v=E2zhlDbMfDg

பதிவிலுள்ள படங்களின் மூலம்(Image sources):
http://www.atheistrepublic.com
http://www.unmaionline.com
http://www.wikipedia.org

1 comment:

  1. சுவாரசியமான பதிவு முகுந்த். வாழ்த்துகள்

    ReplyDelete